இந்த பாலியல் குற்றச்சாட்டில் பிரஜ்வலின் தந்தையும் ஹொலெநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணாவும் சிக்கினார். ஆனால் ஏப்ரல் 27ம் தேதியே பிரஜ்வல் ரேவண்ணா அவரது டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிவிட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் மஜதவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரஜ்வலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவந்து கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி பிரஜ்வலுக்கு பிடிவாரண்ட் பெற்று வைத்திருந்தது.
இன்டர்போல் பிரஜ்வலுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. பிரஜ்வலின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதினார். எஸ்.ஐ.டியும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. மாநில அரசும், எஸ்.ஐ.டியும் கொடுத்த அழுத்தத்தினால், பிரஜ்வலுக்கு வெளியுறவு அமைச்சகம், அவரது பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அனைத்துவகையிலும் தனக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மே 31ம் தேதி எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராவதாக பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 27ம் தேதி வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்படி, நேற்று ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு அவர் புறப்பட்டுள்ளதாக எஸ்ஐடிக்கு தகவல் கிடைத்தது. பெங்களூரு விமானநிலையத்தில் அவர் வந்திறங்கியதும் அங்கு வைத்தே அவரை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரஜ்வலிடம் பாலியல் வீடியோக்கள் குறித்து எஸ்.ஐ.டி குழு விசாரணை நடத்தும். இதற்கிடையே, பிரஜ்வல் பெங்களூரு வருவது உறுதியானதுமே, பாலியல் வழக்கிலிருந்து அவருக்கு முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மே 29ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரஜ்வல் முன் ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
The post வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பும் பிரஜ்வலை பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.