மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு!

மணிப்பூர்: மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போரட்டம் எதிரொலியாக அங்கு கடந்த 11ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் தொடந்து மூடப்பட்டிருந்தது.

 

The post மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: