கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது: சசிகலா இணைப்பு குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

மதுரை: அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோன்றது. அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தான் சார்ந்த சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை.

சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா?. தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக 2-ம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலாதான் காரணம். உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக ஆட்சியை வழிநடத்தியதாகக் கூறிக் கொள்ளும் சசிகலா அவர் சார்ந்த சமூகத்தினருக்கு செய்த நன்மை என்ன?.

தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா?. சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம். அதிமுகவினர் தற்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் என்று கூறினார்.

The post கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது: சசிகலா இணைப்பு குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் appeared first on Dinakaran.

Related Stories: