டெல்லியில் மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் நேற்று முன்தினம் மாலை டெல்லியில் உள்ள டோல் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாட்டை சேர்ந்த வி.பாலகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன் ஆகியோர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு திமுக மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சீதாராம் யெச்சூரியின் மறைவு நாட்டுக்கும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு பேரிழப்பாகும். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அவர்களுக்கும் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், இன்று மாலை 3 மணிவரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

The post டெல்லியில் மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: