பூரி கட்டையால் மூதாட்டியை தாக்கி 50 பவுன் கொள்ளையடித்த 7 பேர் கும்பல் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி(76). ராமலிங்கம் வீட்டில் இல்லாத நிலையில் நள்ளிரவில் யாரோ கதவை தட்டியபோது, கனகவள்ளி கதவை திறந்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் சிலர், சப்பாத்தி கட்டையால் கனகவள்ளியை தாக்கிவிட்டு, வீட்டினுள் நுழைந்து 50 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ராமலிங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்பி பாலசந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று, சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை செய்தனர். சாகுல் (19), வெங்கடேஷ்(20) ஆகிய அந்த இரண்டு வாலிபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.

இதில் இருவரும், வீடு புகுந்து மூதாட்டி கனகவள்ளியை தாக்கி கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சாகுல், வெங்கடேசன் ஆகியோருடன் அவர்களது நண்பர்கள் விஜய்(18), ராகுல்(20), தர்(22), புகழேந்தி(20) மற்றும் 16 வயது சிறுவன் என 5 பேர் அடையாளம் காணப்பட்டு சிறுவன் உட்பட 7 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன், மூதாட்டியை தாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சப்பாத்தி கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் மீதி நகைகளுடன் தலைமறைவாக உள்ள 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தேடி வருகின்றனர்.

The post பூரி கட்டையால் மூதாட்டியை தாக்கி 50 பவுன் கொள்ளையடித்த 7 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Related Stories: