பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமம், பழண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் (41). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது தாய், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை தீனதயாளன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மனைவி சுப்ரியா பல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்றார். பிள்ளைகள் கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அவரது தாய் கோவிந்தம்மாள் அதே பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்று மதியம் 1.30 மணிக்கு கோவிந்தம்மாள், 100 நாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த கம்மல், வளையல் என மூன்றரை சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்போரூர் போலீசார், தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: