புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தங்க மூக்குத்தி, எலும்புமுனை கருவி, பாசிமணி கண்டெடுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் தங்க மூக்குத்தி, தோடு, எலும்பு முனை கருவி, சிவப்பு நிற பாசி மணி ஆகிய 3 பொருட்கள் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளன. சங்ககால கோட்டையாக கருதப்படும் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்ததை கண்டறிந்து, கடந்த மே 20ம் தேதி தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே ஏ1 எனும் குழியில் 19 செ.மீ. ஆழத்துக்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதுவரை வட்டச்சில்லுகள்- 49, கென்டி மூக்குகள்- 2, கண்ணாடி வளையல்கள் – 4, கண்ணாடி மணிகள்- 95, சுடுமண் விளக்கு- 1, தக்களிகள்- 2, காசு- 1, சூதுபவள மணி- 1 மெருகேற்றும் கற்கள்- 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடுகள் இரண்டும் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள், கறுப்புநிற பானை ஓடுகள், கறுப்பு- சிவப்பு நிற பானை ஓடுகள், கூரை ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள்-2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் நேற்று அகழாய்வில் 3 முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. ெஹச் 2 எனும் குழியில் 133 செ.மீ. ஆழத்தில் 6 இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, தோடு ஒன்று, பி 1 எனும் குழியில் 140 செ.மீ. முதல் 145 செ.மீ. ஆழத்தில் எலும்பு முனை கருவி, 150 செ.மீ. முதல் 160 செ.மீ. ஆழத்தில் வட்ட வடிவ சிவப்பு நிற கார்னீலியன் பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளன. எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. தற்போது இங்கு கிடைத்துள்ள வட்ட வடிவிலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சூதுபவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட 0.26 கிராம் எடையுடைய தங்க மூக்குத்தி, தோடு கிடைத்திருப்பது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனைத்திடல் வாழ்விட பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள, அகலத்தில் 8 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பொற்பனைக்கோட்டையில் சுந்தரராஜன் என்பவர் நிலத்தில் 4 குழிகளும், மாரிமுத்து, கருப்பையா, பழனியப்பன், ரெங்கசாமி ஆகியோரின் நிலத்தில் தலா 1 குழிகளும் தொடர்ந்து தோண்டப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆய்வு மாணவர்கள் சுதாகர், முனுசாமி, பாரத் அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தங்க மூக்குத்தி, எலும்புமுனை கருவி, பாசிமணி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: