மாமல்லபுரம் சிற்ப கலைஞருக்கு பூம்புகார் மாநில விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்ப கலைஞருக்கு பூம்புகார் மாநில விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். தமிழ்நாட்டில் தலை சிறந்த கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் மாநில விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2022 – 23ம் ஆண்டுக்கான பூம்புகார் விருதுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

மாமல்லபுரத்தில் கல்பாக்கம் செல்லும் சாலையில் சிற்ப கலைகூடம் நடத்தும் சிற்ப கலைஞர் யானை வரதன் என்பவர் இரண்டரை அடி உயரத்தில் கருங்கல்லில் செதுக்கிய தமிழ் தாய் சிலைக்காக பூம்புகார் மாநில விருது பெற்றார். அவருக்கு, ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கப் பதக்கம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்து பாராட்டினார். விருது, பெற்ற சிற்பக்கலைஞர் யானை வரதனை சக சிற்பக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

The post மாமல்லபுரம் சிற்ப கலைஞருக்கு பூம்புகார் மாநில விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: