மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு..!!

மணப்பாறை: மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மனப்பாறையை சேர்ந்தவர் சந்தோஷ் (20) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

இவர்கள் கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி மதுரையில் தங்கி உள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த நா.த.க மாநில கொள்கை பரப்பு செயலாளராகவும், தற்போது வழக்கறிஞராகவும் இருந்து வரும் அருணகிரி என்பவர் தனது சகாக்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் மாற்று சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்ய முயன்ற மாணவர் சந்தோஷை காரில் கடத்தி கொடூரமாக தாக்கினார். சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு பெண்ணை அழைத்து சென்றனர். இந்த நிலையில் காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்.

இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து சந்தோஷிடம் வாக்கு மூலம் பெற்று அருணகிரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருடன் சென்ற கார்த்தி, பிரவீன் 3 பேரையும் வளநாடு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணகிரி, பிரவீன், கார்த்தி உள்ளிட்ட 3 பேரையும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தியுள்ளனர்.

The post மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: