இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்; ரோகித், கோஹ்லி தீவிர பயிற்சி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இது இந்திய அணி வென்ற 2வது டி20 உலக கோப்பையாகும். இதையடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் அறிவித்தார். அதை தொடர்ந்து கோஹ்லி, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். டி20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி என 3 வடிவிலான போட்டிகளுக்கும் தனித் தனி அணியை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் கம்பீர் தீவிரமாக இருந்தார். அதன்படி டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. இன்று 3வது டி20 போட்டி நடக்கிறது.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் டி20யில் ஓய்வு பெற்ற கேப்டன் ரோகித், விராட் கோஹ்லி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். மேலும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஒரு நாள் தொடருக்கான அணியில் இடமில்லை. மேலும் நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஐபிஎல்லில் கோப்பை வென்ற கொல்கத்தா அணியில் அங்கம் வகித்த வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா, ஸ்‌ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் கொலம்போ பிரேமதாசா மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்; ரோகித், கோஹ்லி தீவிர பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: