ஊட்டி அருகே கல்லட்டி, ஏக்குணி மலையில் பூத்துகுலுங்கும் குறிஞ்சி மலர்கள்

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள கல்லட்டி மற்றும் ஏக்குணி மலையில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை உள்ளூர் மக்கள் மர்ரும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர்.‘‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’’ எனப்படும் குறிஞ்சி மலர்கள் மலைகளில் பூக்கக்கூடியது. இந்த குறிஞ்சி மலர் குடும்பத்தில் 200 வகைச் செடிகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

இதில், 150 வகைகளை கொண்ட குறிஞ்சி மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான, நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. நீலக்குறிஞ்சி மலர்ச் செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செமீ வரையில் இருக்கும். அதன் பூக்கள் ஊதா நிறுத்திலோ அல்லது நீல நிறத்திலோ காணப்படும்.

குறிஞ்சி மலர்களில் பெரும்பாலானவை கோயில் மணிகளின் உருவத்தை போன்று காணப்படும். இதில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்கள் காணப்படுகிறது. இதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களே சிறப்பானதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பிக்கிபத்து மந்து வனப்பகுதிகளில் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்திருந்தது. ஆனால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி மற்றும் ஏக்குணி பகுதியில் மலை முழுவதும் தற்போது நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

 

The post ஊட்டி அருகே கல்லட்டி, ஏக்குணி மலையில் பூத்துகுலுங்கும் குறிஞ்சி மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: