மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்

மானாமதுரை : மானாமதுரை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று இரவு பெண்கள் சட்டிசோறு சுமந்து ஊர்வலம் சென்றனர். பின்னர் அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரயில்வேகேட் அருகே மிகவும் பழமையான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம், கஸ்பா கிராமத்தினர் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், கால்நடைகள், மனிதர்கள் நோயின்றி வாழ வேண்டியும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இந்த கோயிலில் அம்மனுக்கு சிறப்பு படையல் செய்து வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த செப்.24-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று இரவு செவ்வாய் சாட்டு உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி கிருஷ்ணராஜபுரம் மக்கள் தங்களது வீடுகளில் அசைவ உணவு வகைகள், கொழுக்கட்டை, பணியாரம் தயாரித்தனர். இந்த உணவு வகைகளை அலங்கரிக்கப்பட்ட மண் சட்டிகளில் வைத்து அதன் மீது தீப்பந்தம் ஏற்றினர். பின்னர் பெண்கள் கறிச்சோறு அடங்கிய மண் சட்டிகளை குறத்தி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பெண்கள் மண் சட்டிகளை சுமந்து ஊர்வலமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Women carrying Chhatchichore procession at Manamadurai Hemanpitari Temple Festival

The post மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: