சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, சதுரகிரியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மொத்தம் 8 நாள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதன்படி புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்கு செல்ல கடந்த 30ம் தேதி முதல் நாளை வரை என 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலையிலேயே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை அனுமதி வழங்கியவுடன் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்றனர். முன்னதாக பக்தர்களின் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, ‘திடீரென மழை பெய்தால் கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பாதையில் நீரோடைகளில் குளிக்க அனுமதியில்லை’ என்றனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர், கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர்.

The post சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: