கிருஷ்ணகிரி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள செலசனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (29). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், திருமணம் செய்வதாக கூறி, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, பிரபுவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று நீதிபதி சுதா விசாரித்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம், போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பக்கமுள்ள அரியாம்பட்டி நொச்சிவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா (29). இவர் கடந்த 2017ம் ஆண்டு, 14 வயது சிறுமியை கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். தகவலின் பேரில், ஜலகண்டாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து,குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, ராஜாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

The post கிருஷ்ணகிரி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: