கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் விடிந்த பிறகும் கடும் பனிமூட்டம்; முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். தமிழகத்தில் கோடைகாலம் முடிந்து தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை காரணமாக அவ்வப்போது பல இடங்களில் கனமழை பெய்து வந்தது. ஒரு வாரமாக மழை இல்லாத சூழலில் பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் தெரியாத அளவிற்கு குளிர் காற்று வீசி வருவதால் பகல் நேரங்களில் மிதமான சீதோஷண நிலை நிலவி வருகிறது. இதனிடையே இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் விடிந்த பிறகும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. சுற்றுப்புறங்களான அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, காரப்பட்டு, சமன்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அதிகாலையில் நடைப்பயிற்சி மற்றும் பணிக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

The post கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் விடிந்த பிறகும் கடும் பனிமூட்டம்; முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: