ஓட்டலில் அனுமதியின்றி பார் அதிமுக கவுன்சிலரின் சகோதரர் கைது: தகவல் கொடுக்காத எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

தஞ்சாவூர்: ஓட்டலில் அனுமதியின்றி பார் நடத்திய அதிமுக கவுன்சிலரின் தம்பியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தகவல் கொடுக்காத சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரண்மனை கடை தெருவில், ஒரத்தநாடு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் முத்துக்குமார்(55), இவரது தம்பி பாஸ்கர் (50) ஆகியோர் ஓட்டல் நடத்தி வருகின்றனர். அங்கு பல ஆண்டு காலமாக அனுமதி இன்றி பார் நடத்தி வருவதாக தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஸ் ராவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு எஸ்பி ஆசிஷ்ராவத் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக சென்றனர். அங்கிருந்த பாரில் 10க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், ஓட்டலில் இருந்து 50 மது பாட்டில்கள், கப், வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஓட்டல் உரிமையாளர் பாஸ்கரை ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து பாஸ்கரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இயங்கி வந்த ஓட்டலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார் குறித்து எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்காத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஆசிஷ்ராவத் அதிரடியாக உத்தரவிட்டார்.

The post ஓட்டலில் அனுமதியின்றி பார் அதிமுக கவுன்சிலரின் சகோதரர் கைது: தகவல் கொடுக்காத எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: