மும்பை நடிகை கைது செய்து கொடுமைபடுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்

திருமலை : நடிகையை கைது செய்து கொடுமைபடுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த நடிகை காதம்பரி ஜேத்வானி தொழிலதிபர் ஒருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க ஆந்திராவில் அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவுடன் ஜேத்வானி மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வித்யாசாகர் மூலம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் பெற்று அந்த வழக்கில் மும்பை சென்ற போலீசார் நடிகை ஜேத்வானி மற்றும் அவரது பெற்றோருடன் கைது செய்து அழைத்து வரப்பட்டு தனி விடுதியில் தங்க வைத்து மும்பை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி வந்துள்ளனர்.

அப்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நடிகையுடன் பல பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பின்னர் சிறையில் அடைத்தனர். ஆனால் அப்போது ஜேத்வானிக்கு எதிராக அரசும் ஆதரவாக இருந்ததால் தனது தரப்பு நியாயத்தை கூறமுடியாமல் இறுதியாக வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதி அளித்த பின்னர் ஆந்திர போலீசாரே வழக்கறிஞர் மூலம் ஜாமீன் பெற்று நடிகையை மும்பைக்கு அழைத்து சென்று வாபஸ் பெற வைத்தனர்.

இதனைதடுத்து அந்த தொழிலதிபர் மீதான வழக்கு கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு அரசு பொறுப்பு ஏற்றதும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. இதில் நடிகை ஜேத்வானிக்கு ஆதரவாக அரசு நின்றது. இதனால் பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகை ஜேத்வானி விஜயவாடா காவல் ஆணையர் ராஜசேகர பாபுவிடம் நேரில் வந்து வழக்கறிஞர் மூலம் கடந்த ஆட்சியில் தனக்கு எதிராக நடந்த சூழ்ச்சிகளையும் இதற்கு துணையாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இந்த வழக்கை விசாரிக்க உதவி ஆணையர் ஸ்ரவந்தி ராய் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் முன்பும் நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரியில் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மேலும் இதுகுறித்து இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையத்தில் குற்ற எண் 469/2024, 192, 211, 218, 220, 354 (டி), 467, 420, 469, 471 ரெட்வித் 120 (பி) ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் மேற்கு ஏசிபி ஹனுமந்த ராவ் மற்றும் இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணா ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தொடர் விசாரணையில் அப்போது நடிகை கைது செய்யப்பட்டபோது விஜயவாடா டிசிபியாக இருந்த விஷால் குன்னி, இந்த வழக்கின் விசாரணையை முழுமையாகக் விசாரிக்காமல் நடிகை ஜத்வானியை கைது செய்துள்ளார். கைதுக்கு முன்பு அவர் 2024 ஜனவரி 31 அன்று அப்போதைய உளவுத்துறை டிஜி பி சீதாராமஞ்சனேயுவை சந்தித்தார்.

அவரின் வாய்மொழி உத்தரவுப்படி பிப்ரவரி 2ம் தேதி மும்பை சென்றார். ஆனால் காலை 6:30 மணிக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலதிகாரிகளிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வ உத்தரவு ஏதும் வராமல், 7:30 மணிக்கு விமானத்தில் நடிகையை கைது செய்ய மும்பை சென்றுள்ளார். டி.சி.பி., பதவியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி விஷால் குன்னி அலுவல் பணிக்காக சென்றதற்காக குறைந்தபட்சம், அதற்கான பயணப்படியை, அரசிடம் இருந்து கோரவில்லை.

மேலும் நடிகையை கைது செய்யும் விஷயத்திலும் அவர்களுக்கு முன்கூட்டியே எந்த தகவல் தெரிவிக்காமல், விதிமுறைகளை பின்பற்றாமல் அப்போதைய உளவுத்துறை டி.ஜி.பி சீதாராமஞ்சனேயுலு, விஜயவாடா காவல் ஆணையர் கிராந்தி ராணா டாடாவின் ஆகியோரின் வாய்மொழி உத்தரவின் பேரில் நடந்ததாக முறைகேடாக மும்பை வழக்கை திரும்ப பெற நடிகைக்கு பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக விசாரணை அதிகாரி ஸ்ரவந்தி ராய் தனது அறிக்கையில் டி.ஜி.பி.துவாரகா திருமலைராவ்க்கு மூன்று நாட்கள் முன்பு சமர்ப்பித்தார்.
இதனையடுத்து டிஜிபி அரசுக்கு அறிக்கை வழங்கினார்.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த அரசு, அதன் அடிப்படையில் ஜெகன்மோகன் அரசில் உளவுத்துறை டி.ஜி.பி பதவியில் இருந்த சீதாராமஞ்சனேயுலு, விஜயவாடா காவல் ஆணையராக இருந்த கிராந்தி ராணா டாடா, உதவி ஆணையராக இருந்த விஷால்குன்னி ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தலைமை செயலாளர் நீரப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விஷால் குன்னி விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டும் என்றும், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நகரை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது பல எஸ்.பிக்கள் மற்றும் டிஐஜிக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், ஒரே நேரத்தில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை அரசு இடைநீக்கம் செய்வது இதுவே முதல் முறை என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post மும்பை நடிகை கைது செய்து கொடுமைபடுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: