கருத்துக்கணிப்பை பொய்யாக்கி காஷ்மீர், அரியானாவில் பாஜ ஆட்சி: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

நெல்லை: கருத்துக்கணிப்பை பொய்யாக்கி காஷ்மீர், அரியானாவில் ஆட்சி அமைப்போம் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். நெல்லை, விருந்தினர் மாளிகையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 21 ஆண்டுக்கு பின் விமான தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த தினத்தில் மெரினா கடற்கரையில் 97 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. அங்கு கூட்ட நெரிசலாலும், வெப்பத்தாலும் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இச்சம்பவம் குறித்து கனிமொழி எம்பி சமாளிக்க முடியாத கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த கருத்தை நானும் வரவேற்கிறேன். போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கை கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காஷ்மீர், அரியானாவில் ஆட்சி அமைப்போம். காஷ்மீரில் சிறப்புச் சட்டம் 370ஐ நீக்கியப் பிறகு அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post கருத்துக்கணிப்பை பொய்யாக்கி காஷ்மீர், அரியானாவில் பாஜ ஆட்சி: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: