காந்தி, காமராஜர் பற்றி பேச பாஜவுக்கு அருகதை இல்லை: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி

திருப்பூர்: சுட்டுக் கொன்றவர்கள், எரிக்க முயன்றவர்கள் எல்லாம் காந்தி, காமராஜர் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என திருப்பூரில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார். காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவு சார்பாக வெள்ளியங்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கலந்து கொண்டு, கலைப்பிரிவு நிர்வாகிகளுக்கு கேடயம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காந்தியை கொன்ற கோட்சேவின் உருவப்படத்தை வைத்து பூஜை செய்கின்ற பாஜகவுக்கும் குறிப்பாக இங்கே தற்காலிக பதவியில் உள்ள காலாவதியான ஹெச்.ராஜா, காந்தியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும், தகுதியும் இல்லை. காமராஜர் அகில இந்திய தலைவராக இருந்தபோது ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் காமராஜரை உயிரோடு எரிக்க முயற்சித்தவர்கள். அப்படி இருக்கிறவர்கள் காமராஜரை பற்றி பேசுவதற்கோ அவரது நினைவுநாளை கொண்டாடுகிறோம் என்று சொல்வதற்கு தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட யாருக்கும் தகுதியும், அருகதையும் கிடையாது.

அரியானா மற்றும் காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். காஷ்மீரிலும் வேட்பாளர்களே கிடைக்காத பாஜகவிற்கு பூஜ்ஜியம் தான் கிடைக்குமே தவிர அவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி மூலமாக ஆயிரம் ஆயிரம் கோடிகளை பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு வெள்ளம் வந்தபோதும், மழை பெய்தபோதும், நிவாரணத் தொகைகளை அளிக்காமல் நம்மை வாட்டுகின்றனர். இந்த பாஜக அரசுக்கு மனித தன்மை இருக்கிறதா? என கேட்க தோன்றுகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

The post காந்தி, காமராஜர் பற்றி பேச பாஜவுக்கு அருகதை இல்லை: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: