பாஜ லட்சக்கணக்கில் செலவு செய்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது: காங். எம்பி ஜோதிமணி வீடியோ வெளியீடு

கரூர்: பாஜ லட்சக்கணக்கில் செலவு செய்து தனக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தசாரப்பட்டியில் கடந்த 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கரூர் எம்பி ஜோதிமணியிடம், கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், தேர்தல் நேரத்தில் மட்டும் வந்தீர்கள், அதற்கு பிறகு இந்த பக்கமே வரவில்லை என கேள்வி எழுப்பியதால், எம்.பி.க்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ளியணை போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி வெளியிட்ட வீடியோவில், ‘கிராம சபைக் கூட்டம் ஒன்றரை மணி நேரமாக நன்றாகதான் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாஜவினர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தூண்டிவிட்டவர்கள்தான் இதுபோல நடந்து கொண்டனர். இந்தியா முழுவதும் பொய் பிரசாரம், வெறுப்பு போன்றவற்றை மூலதனமாக கொண்டு பாஜ தேர்தலை எதிர்கொள்கிறது. கரூர் தொகுதி மட்டுமின்றி, தமிழகத்தில் எந்த தொகுதியிலும் பாஜ வெற்றி பெறாது. இந்தியா கூட்டணிதான் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என்று கூறி உள்ளார். ஜோதிமணியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post பாஜ லட்சக்கணக்கில் செலவு செய்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது: காங். எம்பி ஜோதிமணி வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: