கோரமண்டல் விரைவு ரயிலின் ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்: பூந்தமல்லி பயணி பரபரப்பு பேட்டி

சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலின், ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன் என, பூந்தமல்லியை சேர்ந்த பயணி தெரிவித்துள்ளார். சென்னை பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(36). இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர், பணி முடித்து வீடு திரும்பிய அவர் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் வந்துள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில்: ‘‘நான் இருந்த எஸ்2 பெட்டியில் 250 மேற்பட்டோர் பயணித்தோம். 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரயில் புறப்பட்டது. பின்னர், 7 மணிக்கு மேல் திடீரென பயங்கர சத்தம். ரயில் பெட்டிகள் சரிய துவங்கியது. 10 நொடியில் அனைத்தும் முடிந்து ஓய்ந்தது. அனைவரும் அலறி அடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினோம்.

நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்தோம். ஜன்னல் கம்பியை பிடித்ததால் நான் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினேன். பின்னர் பெட்டியை விட்டு ஒரு வழியாக வெளியே வந்தோம். எங்கும் இருட்டாக இருந்தது. எந்தனை ரயில் பெட்டிகள் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை. எங்கும் உடல் சிதறி கிடந்தது. பின்னர் அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்கள் என பார்த்தேன். அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் சேர்ந்து அருகே உள்ள சாலைக்கு சென்று பேருந்து மூலம் புவனேஷ்வர் போனேன். அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றேன். அங்கிருந்து மீண்டும் பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் அடிக்கடி கேட்டு கொண்டு இருந்தனர்.’’ என்றார்.

The post கோரமண்டல் விரைவு ரயிலின் ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்: பூந்தமல்லி பயணி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: