தேசிய கால்பந்து பட்டம் வென்ற மகளிர் அணிக்கு ரூ. 60 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி பாராட்டு

சென்னை: முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்டங்களுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உயரிய ஊக்கத் தொகையை வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (25.07.2023) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும், 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியை சார்ந்த 22 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளையும், பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இப்போட்டிகளை நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,76,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் ஜுலை 1–ந் தேதி முதல் ஜுலை மாதம் 25–ந் தேதி வரை 17 இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் பங்கேற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் -வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக தனியார் விடுதிகள் மற்றும் அரசு விருந்தினர். மாளிகை
ஆகியவைகளில் 2000-க்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர், விடுதிகளிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன், போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மூன்று வேளை உணவு மற்றும் சிற்றுண்டி, வீரர்கள் வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள், அனைத்து இடங்களிலும் மருத்துவ வசதி ஏற்பாடுகள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஆகியவை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
“முதலமைச்சர் கோப்பை 2023” மாநில அளவிலான இறுதிப் போட்டிகளில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இதில் சென்னை மாவட்டம், 61 தங்கம், 33 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம், 18 தங்கம், 19 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் வென்று இரண்டாம் இடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் 15 தங்கம், 13 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் வென்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்”முதலமைச்சர் கோப்பை – 2023″ல் முதல் மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இப்பரிசுக் கோப்பைகளை முதலிடத்தை பெற்ற சென்னை மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, இரண்டாமிடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், அவர்களும், மூன்றாமிடத்தை பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட அணியின் சார்பாக கோயம்புத்தூர் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் கே. செல்வம், மற்றும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் பெற்று கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டியில், முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணியை சார்ந்த டி.தேவி, என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி, என். அம்சவள்ளி ஆகிய 22 வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் 55 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) சார்பில் 5 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயரிய ஊக்கத்தொகையாக முதலமைச்சர் வழங்கினார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 26.6.2021 முதல் 12.07.2023 வரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1684 விளையாட்டு வீரர்களுக்கு 49 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநாகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற றுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ் குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தேசிய கால்பந்து பட்டம் வென்ற மகளிர் அணிக்கு ரூ. 60 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோப்பைகளை வழங்கி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: