திருமலை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வேண்டும் என்று பெங்களூரு ரேவ் பார்டி (போதை டான்ஸ்) வழக்கில் சிக்கிய நடிகை, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஜி.ஆர்.பண்ணை வீட்டில் கடந்த 19ம்தேதி ரேவ் பார்ட்டி (போதை டான்ஸ் பார்ட்டி) நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஆந்திர சினிமா நடிகை ஹேமா உட்பட 103 பேரை கைது செய்தனர். மேலும் கைதானவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினார்களா? என சோதனை செய்ய அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பரிசோதனையில் நடிகை ஹேமா உட்பட 86 பேர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் நிபந்தனைகளுடன் விடுவித்தனர்.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு நேற்று விசாரணைக்கு வர வேண்டும் என நடிகை ஹேமா உட்பட 86 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை ஹேமா போலீஸ் விசாரணைக்கு செல்லாமல் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது எனவும், விசாரணைக்கு ஆஜராக சிறிது கால அவகாசம் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஹேமாவின் கோரிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிராகரித்துள்ளதாகவும், மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post பெங்களூரு போதை டான்ஸ் வழக்கு; விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்கிறார் நடிகை ஹேமா: குற்றப்பிரிவு போலீசுக்கு கடிதம் appeared first on Dinakaran.