அரியானா சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ்- ஆம்ஆத்மி கூட்டணி?

புதுடெல்லி: அரியானா பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்து அர்விந்த் கெஜ்ரிவாலிடம் ஆலோசித்த பிறகே உறுதி செய்யப்படும் என ஆத் ஆத்மி தெரிவித்துள்ளது. அரியானாவின் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு 3ம் முறையாக ஆட்சியை பிடிக்க பாஜ தீவிரம் காட்டி வருகிறது. அரியானா மக்கள் பாஜ ஆட்சிக்கு எதிராக இருப்பதாக கூறி வரும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களிடம் ஆலோசித்தார். பாஜ எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதை ராகுல் விரும்பவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆம் ஆத்மி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், “அரியானா பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. காங்கிரசின் விருப்பத்தை வரவேற்கிறோம். தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். கூட்டணி குறித்த காங்கிரசின் விருப்பம் பற்றி ஆம் ஆத்மியின் அரியானா பொறுப்பாளர் சந்தீப் பதக் மற்றும் மாநில தலைவர் சுஷில் குப்தா ஆகியோர் ஆலோசித்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் ஒப்புதலுக்கு பிறகு இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

 

The post அரியானா சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ்- ஆம்ஆத்மி கூட்டணி? appeared first on Dinakaran.

Related Stories: