நாமக்கல், டிச.3: நாமக்கல் நகராட்சி 4 மற்றும் 20வது வார்டில் அதிமுக சார்பில், இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பாஸ்கர் எம்எல்ஏ பேசியதாவது: கடந்த 10 ஆண்டில் நாமக்கல் நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், பயணியர் மாளிகை சுற்றுச்சுவரை இடித்து சாலை அகலப்படுத்தப்பட்டது. கோட்டை பகுதியில் அசுத்தமான 2 குளங்களை சீரமைத்து, தூர்வாரி அழகு படுத்தப்பட்டு உள்ளது. கொண்டிசெட்டிப்பட்டி ஏரி ₹5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட நல்லிபாளையம் ஏரியை ₹75 லட்சத்தில் சீரமைக்க திட்டமிடப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. கொசவம்பட்டி ஏரி ₹50 கோடியில் சீரமைக்கப்படுகிறது. நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண, நாமக்கல் நகரில் ரிங் ரோடு அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்.