நாமக்கல், டிச.2: மாறுதலில் சென்ற பள்ளிக்கு பணிப்பதிவேடு, சம்பள பட்டியலை அனுப்ப தலைமை ஆசிரியர் மறுப்பதால், சம்பளம் பெற முடியவில்லை என, கொல்லிமலைக்கு மாறுதலில் சென்ற ஆசிரியர் சிஇஓவிடம் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன். இவருக்கும், அப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தனபால்(28) என்பவருக்குமிடையே, கடந்த 3 ஆண்டாக பணிப்போர் நிலவி வந்தது. ஆசிரியர் தகுதி காண் பருவம் பெறுவதற்கான பரிந்துரையை, தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் செய்து கொடுக்கவில்லை. இதனால், மன உளைச்சல் அடைந்த ஆசிரியர் தனபால், இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து சிஇஓ அய்யண்ணன்னின் பரிந்துரைப்படி, தனபாலை நிர்வாக மாறுதல் மூலம், கொல்லிமலையில் உள்ள அரசு மாதிரி பள்ளிக்கு, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். மேலும், அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியை, கோட்டபாளையத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.