கலசபாக்கம், டிச.2: ஆசிரியர்களால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், ஆசிரியர் தினவிழா, பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் மையம் துவக்க விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் நிலவழகி பொய்யாமொழி வரவேற்றார்.இதில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து 551 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். பின்னர், பெண்கள் கைவினைப் பொருட்கள் மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். அதிக நேரம் மாணவர்கள் ஆசிரியர்களுடன் தான் உள்ளனர். மாணவர்களின் மனநிலையை அறிந்து அவர்களின் மனநிலைக்கேற்ப ஆசிரியர்களால் மட்டுமே கல்வி கற்பிக்க முடியும். மேலும், ஆசிரியர்களால் மட்டுமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.