நாகர்கோவிலில் பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் உருட்டு கட்டையால் அடித்து முதியவர் கொடூரக் கொலை

நாகர்கோவில், டிச.2: நாகர்கோவிலில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் நடுரோட்டில் முதியவரை, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அடித்து ெகான்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நாகர்கோவில் மாநகரின் மைய பகுதியான மணிமேடை சந்திப்பில் இருந்து, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை செல்லும் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று மதியம் 2 மணியளவில் கையில் உருட்டுக்கட்டையுடன் இந்தியில் பேசியவாறு ஒருவர் தர்மம் எடுத்துக் கொண்டு இருந்தார். காசு தர மறுத்த கடைக்காரர்களை, பல்லை கடித்துக் கொண்டு மிரட்டும் வகையில்  சென்றார். அதே சமயத்தில் அந்த பகுதியில் லுங்கி, சட்டை அணிந்து தாடியுடன் சுமார் 60 வயது நிரம்பிய முதியவர் ஒருவரும் தர்மம் எடுத்தவாறு இருந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே கடைக்கு சென்று பணம் கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் கையில் உருட்டுக்கட்டையுடன் நின்றவர், திடீரென இந்தியில் பேசியவாறு ஆத்திரத்தில் அந்த முதியவரை கீழே தள்ளி, கையில் இருந்த உருட்டு கட்டையால் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் நடுரோட்டில் அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன் பின்னரும் வெறி அடங்காமல் அங்கும், இங்கு ஆடிக்ெகாண்டு உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் என அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் ஒருவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் தனது வெறியாட்டத்தை முடித்தவர், அங்கிருந்து செல்ல முயன்றார்.  வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரை ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியவர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காவி வேஷ்டி, கையில் உருட்டு கட்டை, கழுத்தில் பாசி, மணிகள் அணிந்தவாறு மிரட்டும் தொனியில் தான் காவல் நிலையத்தில் இருந்தார். இவர் இந்தியில் பேசியதால், முதலில் போலீசாரால் தகவல் பெற முடிய வில்லை. பின்னர் இந்தி தெரிந்த போலீசாரை வரவழைத்து விசாரணை நடந்தது. நாகர்கோவிலில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் கூட, கையில் உள்ள உருட்டு கட்டையை பறித்து தாக்குதலை தடுக்கவில்லை என்பது வேதனையான விஷயம் ஆகும்.

கண்டுகொள்ளாமல் சென்ற போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த சாலை வழியாக தான் எஸ்.பி. அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். நேற்று மதியம் பணி முடிந்து சாப்பிடுவதற்கு அந்த வழியாக இரு போலீஸ் அதிகாரிகள் ஜீப்பில் சென்றனர். முதியவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அந்த அதிகாரிகள், அங்கு நின்ற ஊர்காவல் படை பெண்ணிடம் விசாரித்து விட்டு அப்படியே சென்று விட்டனர்.  ரோந்து பணியில் இருந்த போலீசார் வந்த பின் தான், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடிந்தது.

1 ரூபாய்க்கு நடந்த தகராறுஇருவரும் அருகருகே கடையில் தர்மம் கேட்டுள்ளனர். அப்போது ஒரு கடையில் 2 ரூபாய் கொடுத்து பிரித்துக் கொள்ளுங்கள் என கூறி உள்ளனர். அந்த ஒரு ரூபாயை இறந்தவர் கொடுக்காததால், உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் விழுந்த பின்னரும், சரமாரியாக அடித்த, கொலை வெறி தாக்குதலை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பரப்பினர். அவை பார்ப்பதற்கே நெஞ்சை பதற வைக்கும் காட்சியாக இருந்தன.

Related Stories: