கரூர், டிச. 1: கரூர் நகரப்பகுதிகளில் திரும்பவும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில மாதங்களாக கரூர் நகரப்பகுதியை ஒட்டியுள்ள டவுன், வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல் போன்ற காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பதுக்கி வைக்க முயற்சி செய்பவர்கள் மீது வழக்கு பதியப்படும் நிகழ்வுகள் அதிகளவு நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கஞ்சா விற்பனை குறித்து மக்கள் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்த நிலையில்தான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நகரப்பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.