மயிலாடுதுறை நவ.30: அரிசியில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதால் ரத்தத்தில் குளுக்கோசை அதிக அளவில் சேர்த்துவிடும் என்பதால் அரிசி உணவை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர். எனவே சுகர் பேஷன்ட் எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்காக ‘லோ ஜி.ஐ.’எனப்படும் லோ கிளைசெமிக் உணவிற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஆர்.என்.ஆர். எனப்படும் தெலங்கானா நெல் ரகம். கடந்த 5 ஆண்டிற்கு முன் இதை கண்டுபிடித்த தெலங்கானா மற்றும் ஆந்திராவில் லோகிளைசெமிக் நெல்ரகம் விளைவிக்கப்பட்டு அரிசி விற்பனையில் உள்ளது. இந்த அரிசியை சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் சேமிக்கும் விகிதத்தை வெகுவாக குறைக்கிறது என்பதால் இந்த நெல்லுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நெல் ரகத்தை திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு நல்ல லாபம் அடைந்து வருகின்றனர். முதன்முதலாக இந்த நெல் ரகத்தை மயிலாடுதுறை பகுதிக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். குறுவையில் 120 நாட்களும், சம்பாவில் 140 நாட்களும் என்ற கணக்கில் இதை பயிரிட பரிந்துரை செய்யப்பட்டாலும் குறுவைக்கு இது உகந்ததாக இருக்காது என்பதால் சம்பா மற்றும் தாளடி விவசாயத்தில் இதை பயிரிட முடிவெடுத்து குத்தாலம் அஞ்சலாறு பகுதியில் செல்வம் என்பவர் தனது நிலத்தில் 25 ஏக்கரில் பயிரிட்டுள்ளார்.