மானாமதுரை, நவ.25: மழை வெள்ளம் புயல் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எந்தவித அறிவுறுத்தலும், நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் மாவட்டம் நிர்வாகம் மந்தமாக இருப்பதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது நிவர் புயல் குறித்து மாநில அரசு ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பை தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வில்லை. மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கண்மாய்கள் நிறைந்து காணப்படுகிறது. எப்போது உடையும் என அச்சத்தில் உள்ளனர். இதுதவிர தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களில் மழை, கண்மாய் உடைப்பு காரணமாக நீர் சூழ்ந்து மூழ்கும் நிலை ஏற்பட்டால் அவர்களை மீட்க தேவையான உபகரணங்கள் கிராம ஊராட்சிகளில் இல்லை. கிராமங்களில் கண்மாய் உடைப்பு ஏற்பட்டால் உடைந்த கரைகளை சீரமைக்க ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் தேவைப்படும். ஆனால் மானாமதுரை பொதுப்பணித்துறை நீர்வள அலுவலகத்தில் 50க்கும் குறைவான மணல் மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைத்துள்ளனர். இதை வைத்து ஒரு மடையை கூட அடைக்க முடியாத நிலை உள்ளது.