புதுக்கோட்டை, நவ.24:புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவசமாக கண் பரிசோதனை செய்து கண் குறைபாடு உள்ளவர்களுக்கு விலையில்லா கண் கண்ணாடிகளை வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் விலையில்லா கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு கண்ணாடிகளை அவரே அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.