அறந்தாங்கி, நவ.23: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகுகள் இன்று(திங்கள்கிழமை)முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி மறுத்துள்ளதால், விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகுகள் இன்று (திங்கள்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி வழங்கவில்லை.