கரூர், நவ. 23: கரூர் உழவர் சந்தை பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையோரம் உழவர் சந்தை செயல்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இந்த பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தை ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சந்தையின் உட்புறம்தான் அனைத்து கடைகளும் செயல்பட்டன. இதனால் பொதுமக்கள் எந்தவிதமான சிரமும் இன்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனர். போக்குவரத்தும் எளிதாக நடைபெற்றது. ஆண்டுகள் செல்ல செல்ல சந்தைக்கு வெளியே சாலையோரம் தற்போது ஏராளமான காய்கறி கடைகள் செயல்படுகிறது. இதனால் காலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.