விருத்தாசலம், நவ. 13: விருத்தாசலம் அருகே கோயில் குளத்தில் பள்ளி மாணவி சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள இருளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகள் வான்மதி(17). இவர் நெய்வேலி என்எல்சி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். வான்மதிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் வீடு பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்றுள்ளனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத வான்மதி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வான்மதி பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஆலடி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.