திருச்சி, நவ. 11: தீபாவளி பண்டிகை கொண்டாட 3 தினங்களே உள்ள நிலையில் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகள், வெடி கடைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. குடும்பம் குடும்பமாக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்து வருவதால் திருச்சி பெரியகடை வீதி, என்எஸ்பி ரோடு உள்பட மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் மாநகர போக்குவரத்து காவல்துறையினருடன் ஊர்க்காவல்படை மற்றும் பள்ளி, கல்லூரி என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் திருச்சி பெரியகடை வீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பள்ளி ஸ்கவுட் ஆசிரியர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். முன்னதாக போக்குவரத்து கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளித்த காவல்துறையினர் 30 ஸ்கவுட் ஆசிரியர்களை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் களமிறக்கி உள்ளனர்.