திருவாரூர், நவ.11: திமுகவில் அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வருவதாக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் சங்கர், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அமுதா சந்திரசேகர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.