வலங்கைமான், நவ.9: வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் உள்ள அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளாக வழங்காமல் பிரித்து வழங்குவதால் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ் ஊராட்சிகளில் உள்ள சுமார் 28 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் அங்காடிகள் மூலம் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக பாமாயில் மற்றும் சக்கரை வழங்கும் என குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் பூந்தோட்டம் கிராமத்தில் செயல்படும் நியாய விலை கடை ஒன்றில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகளாக வழங்கப்படவில்லை. மாறாக பாக்கெட்டுகள் மொத்தமாக பிரித்து ஒரு பாத்திரத்தில் சேகரித்து பின்னர் அரை லிட்டர் வீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.