வேலூர், நவ.6: வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். வேலூர் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹1000 கோடியில் பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கஸ்பா பகுதியில் ₹5 கோடி விளையாட்டு மைதானம், ₹46.51 கோடியில் புதிய பஸ் நிலையம், ₹13.25 கோடியில் மல்டி கார் பார்க்கிங் கட்டிட பணிகள், விருதம்பட்டு சர்க்கார் தோப்பில் ₹13.24 கோடியில் 7 ஏக்கரில் சோலார் பேனல்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சப்ளையாகும் வகையில் சர்க்கார் தோப்பில் உள்ள சோலார் பேனல் அமைக்கும் பணி, பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளையும் அவர் பார்வையிட்டார்.