களக்காடு,நவ.3: திருக்குறுங்குடி அருகே புதிய பாலத்திற்கு இணைப்பு சாலை குறுகியதாக அமைக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து ரூபி
மனோகரன் நேரில் ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே ஆவரந்தலை-தளவாய்புரம் இடையே நம்பியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் கடந்த 1.12.2017ம் தேதியன்று இரவில் திடீர் என இடிந்து விழுந்தது. பாலம் கட்டுமான பணிகளில் முறைகேடு நடந்ததாலேயே கட்டப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பாலம் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இடிந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக அங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. புதிய பாலத்திற்கு இரண்டு புறமும் அமைக்கப்பட்டு வரும் இணைப்பு சாலை மிகவும் குறுகியதாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதனிடையே நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபிமனோகரன் புதிய பாலம் கட்டுமான பணிகளையும், இணைப்பு சாலையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.