செங்கம், அக்.30: செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு எம்எல்ஏ மு.பெ.கிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையானது கடந்த 2010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த அணைக்காக தங்களது விளைநிலங்களை வழங்கிய மலைவாழ் மக்கள் 105 குடும்பத்தினருக்கு, வீட்டுமனை பட்டா வழங்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலைக்கழித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோரது தலைமையில், துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் 105 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையொட்டி, திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி. ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் உட்பட மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.