சோழவந்தான், அக். 21: சோழவந்தான் ஸ்டாண்டில் ஓடாமல் நின்ற வேனுக்கு தஞ்சாவூர் போலீசார் ரூ.200 அபராதம் விதித்திருப்பதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். சோழவந்தானை சேர்ந்தவர் செந்தில். இவர் சொந்தமாக வேன் வைத்து சுற்றுலா டிரீப் அடித்து வருகிறார். இவரது வேன் கடந்த 10 நாட்களாக எங்கும் செல்லாமல் சோழவந்தான் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ரூ.200 அபராதம் கட்ட சொல்லி செந்தில் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் ஓடாமல் நிற்கும் வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்ததை எண்ணி வேதனையில் உள்ளார்.