கிளைச்சிறைக்கு முன்பு தற்கொலை மிரட்டல்

திருமங்கலம், அக்.20: மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தில் கடந்த மாதம் 29ம் தேதி வீட்டினை வாடகைக்கு பிடித்து விபச்சாரம் நடத்தியதாக புரோக்கர் சிவராமன்(34) போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டிலிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சிவராமன் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் இந்த வழக்கில் மதுரை வடபழஞ்சியை அடுத்த அடக்கம்பட்டி துரைராஜ்(34) என்பவரை திருமங்கலம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் காலை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கார்கள் மற்றும் 9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. திருமங்கலம் குற்றவியல் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட துரைராஜை மேலூர் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருமங்கலம் டவுன் போலீசார் துரைராஜை மேலூர் கிளைசிறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சென்று ரிமாண்ட் செய்ய முயன்ற போது போலீசார் பொய்வழக்குபோட்டுள்ளதாக கூறி தான் தற்கொலை செய்து கொள்ள மாத்திரைகள் சாப்பிட்டதாக கூறி துரைராஜ் மயங்கியுள்ளார். இதனால் சிறைநிர்வாகம் கைதியை ஏற்கமறுத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மேலூர் அரசு மருத்துவமனையில்  துரைராஜை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் நன்றாக இருப்பதாக கூறவே போலீசார் டாக்டர் அறிக்கையுடன் மீண்டும் மேலூர் கிளைசிறைக்கு கைதியை அழைத்து சென்றனர்.

ஆனால் கிளைச்சிறை நிர்வாகம், அவரை ஏற்கமறுத்துவிட்டது. இதனால் விரக்தியடைந்த போலீசார், மீண்டும் திருமங்கலம் அழைத்து வந்து அங்குள்ள கிளைச்சிறையில் ரிமாண்ட் செய்ய முயன்றனர். ஆனால், துரைராஜ் திருமங்கலம் கிளைச்சிறை வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தி தற்கொலை செய்து கொள்ளவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் திருமங்கலம் கிளைச்சிறை நிர்வாகமும் கைதியை ஏற்க மறுத்தனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிறைவாசலில் அமர்ந்திருந்த துரைராஜ், ஒரு கட்டத்தில் சிறையின் சுற்றுசுவரில் முட்டி தற்கொலை முயற்சி செய்தார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். டவுன் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐக்கள் பாலமுருகன், சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கைதி துரைராஜிடம் அதிகாலை வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சமாதானம் அடைந்த துரைராஜை நேற்று காலை 6.30 மணிக்கு திருமங்கலம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories: