தொடுகாடு பஞ்சாயத்தில் பெரிய நிறுவனங்களிடமிருந்து சொத்து வரி வசூலிக்க ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் கலெக்டர் தரப்பு தகவல்

திருவள்ளூர், மே 4: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுக்காடு பஞ்சாயத்தின் தலைவர் பி.வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தொடுக்காடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் 26க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் சில ஊராட்சி நிலங்களை ஆக்கிரமித்து செயல்படுகின்றன. ஆனால், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள் என பஞ்சாயத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் பஞ்சாயத்திற்கு சொத்துவரி, தொழில் வரி, தொழிற்சாலை உரிமக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தவில்லை. எனவே, இந்த நிறுவனங்கள் தொடுக்காடு பஞ்சாயத்துக்கு தரவேண்டிய வரிகளை வசூலிக்க வருவாய் வசூல் அதிகாரியை நியமனம் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வரியை செலுத்தவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி பஞ்சாயத்துக்கு தலைவர் வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி நீதிமன்ற உத்தரவை கலெக்டர் செயல்படுத்தவில்லை என்றார். இந்த இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தரப்பு பதில் தருமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இந்த நிறுவனங்கள் தர வேண்டிய சொத்துவரி, தொழில்வரி மற்றும் தொழிற்சாலை உரிமக் கட்டணம் ஆகிய நிலுவைத் தொகை ₹33.96 கோடியை வசூலிக்க ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தொடுகாடு பஞ்சாயத்தில் பெரிய நிறுவனங்களிடமிருந்து சொத்து வரி வசூலிக்க ஊராட்சி மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் கலெக்டர் தரப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: