கலசபாக்கம், அக். 18: கலசபாக்கம் அருகே நேற்று குழந்தை வரம் வேண்டி பெண்கள் மடி சாதம் சாப்பிட்டனர்.கலசபாக்கம் அருகே துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவர். முக்கிய நிகழ்ச்சியான மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சி 5வது சனிக்கிழமையில் நடைபெற்று வருகிறது. இதில் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண வயதை கடந்தும் திருமணமாகாதவர்கள் கலந்துகொண்டு மடி சாதம் சாப்பிடுவார்கள்.