மதுரை, அக்.18: மதுரையில் பழங்குடி மக்கள் தங்களின் வேட்டை பொருட்களுடன் பாரம்பரிய முறைப்படி படையல் இட்டு வள்ளியை வழிபட்டனர். பல்வேறு ஆலயங்களிலும் தமிழ் கடவுளாம் முருகப் பெருமான், தனது மனைவிகள் வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார். பழங்குடி குறவர் பிரிவைச் சேர்ந்த வள்ளியை முருகன் காதலித்து திருமணம் செய்தார். வள்ளியின் வழித்தோன்றல்களாக பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். குறவர் பழங்குடியினர் (நரிக்குறவர் அல்ல) வள்ளிக்கு பல்வேறு இடங்களில் கோயில் கட்டி குலதெய்வமாக வழிபடுகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வள்ளியின் வழி தோன்றல்களான பழங்குடி மக்கள் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தங்களின் குலதெய்வமான வள்ளி பெயரில் கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3 நாள் திருவிழா நடக்கும்.