புதுக்கோட்டை, அக்.18: கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் தாவூத் கனி, தாளாளர்கள் பாலகிருஷ்ணன், அருள்சாமி, கனகராஜன், அறங்காவலர் கான்அப்துல் கபார்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா கூகுள் மீட் காணொலி மூலமாக விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
ஆசிரியர் படிப்பு என்பது தன்னுடைய தனி அந்தஸ்த்தை உயர்த்திக்காட்டும். வேறு எந்தப்படிப்பு படித்தாலும் தன்னுடைய குடும்பமோ, அல்லது சில குறிப்பிட்ட துறைத்தான் பயன்பெறும். ஆனால் ஆசிரியர் படிப்போ அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை எடுத்து சொல்வதோடு, இந்த சமூகத்திற்கு தேவையான அனைத்து விதமான பண்புகளையும் கற்றுத்தருகிறது. வகுப்பறையில் பாடங்களை இனிமையாக கற்பிக்கும் வழிமுறைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்மனிதனாக பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் இரண்டு புகைப்படங்கள் மிகவும் அவசியம். ஒன்று திருமண புகைப்படம் மற்றொன்று கல்லூரியில் பட்டம் வாங்கும் புகைப்படம். இந்த இரண்டுமே நாம் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். நமது குழந்தைகள் அந்த புகைப்படங்களை பத்திரமாக பாதுகாக்கின்ற பொறுப்பு கண்டிப்பாக உண்டாகும் என்றார்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.இளங்கலை கல்வியியலில் 136பேர்க்கும் முதுகலையில் 23பேர்க்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. தரவரிசையில் கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த கணிதவியல் துறை மாணவி பதாவிராணி, ஆங்கிலத் துறையை சேர்ந்த அர்ச்சனா, இயற்பியல் துறையைச் சேர்ந்த காளீஸ்வரி ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.