திண்டுக்கல், அக். 16: திண்டுக்கல்லில் வடமதுரை சிறுமி பாலியல் கொலை வழக்கில் நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரவி தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் சுதந்திரதேவி, மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, தென் மண்டல செயலாளர் சுகுமாறன், மாநில செயலாளர் பாரதி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வடமதுரை சிறுமி பாலியல் கொலை வழக்கில் நீதி கேட்டும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும், வடமதுரை காவல்துறையை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.