திருவண்ணாமலையில் 7வது மாதமாக தடை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

திருவண்ணாமலை, அக்.2: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் பவுர்ணமி நாட்களில் இயக்கப்படும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த மார்ச் 24ம்தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் காரணமாக கடந்த மாதம் 1ம்தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனார். ஆனாலும் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து 7வது மாதமாக புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என கலெக்டர் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 2.55 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தனித்தனியாகவும், குடும்பமாகவும் கிரிவலம் செல்ல முயன்றனர். ஆனால், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும், கிரிவலப்பாதை வழியாக கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களையும் அனுமதிக்கவில்ைல. கிரிவலப்பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்பி அரவிந்த் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் விழிப்புணர்வு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர்.

Related Stories: