திருவண்ணாமலை, அக்.2: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். திருவண்ணாமலையில், மாதந்தோறும் பவர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் பவுர்ணமி நாட்களில் இயக்கப்படும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த மார்ச் 24ம்தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் காரணமாக கடந்த மாதம் 1ம்தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனார். ஆனாலும் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து 7வது மாதமாக புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என கலெக்டர் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.