திருச்சி, அக்.2: திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் கொரானா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கிராம சபை கூட்டம் என்பது கிராம சுயராஜ்யத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக இக்கூட்டம் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் அக்.2 (இன்று) கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் சிவராசு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். ஆனால் கொரானா பெருந்தொற்று நோய் பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் சிவராசு நேற்றிரவு தெரிவித்தார்.